மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையாக மழை பெய்வதன் காரணமாக மலையகத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என்பன பெருக்கெடுக்கும் நிலை காணப்படுவதுடன், நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்படுகின்றது.
அந்த வகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த வீதியை பயன்படுத்தும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பட்டுள்ள மண்சரிவை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அடிக்கடி மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் இப்பகுதியில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.