தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 900 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதே நிலைமை தொடருமானால் எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.