மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பல பில்லியன் பணத்தினை ஊழல் செய்துள்ளமை மேலோட்டமான விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
மேலும் பங்குகளை விற்பனை செய்யும் போதும் வட்டிகளை நிர்ணயம் செய்யும் போதும் அர்ஜூன் மகேந்திரன் தன்னிச்சையாக செயற்படும் போதுமே இத்தகைய ஊழல்கள் நடைபெற்றுள்ளது.
முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கும் நிறுவனங்களை தனக்கு சாதகமாக அர்ஜூன் மகேந்திரன் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலமாக ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 30000 கோடிகள் வரையில் அரசிற்கு கடன்கள் காணப்படுகின்றது. இதில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் கடன் தொகையை குறைத்து கொண்டுள்ளது.
மேலும் கோப் குழுவின் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது இதன் போது மேலதிக உண்மைகள் வெளிப்படுத்தப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.