தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று 12 நாளாகவும் தொடர்ந்து முன்னேறிச்சென்றுகொண்டிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் அண்மையில் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் பயணம் பிரான்ஸ் நாட்டின் பல்ஸ்பேர்க் மாநகர சபையில் தியாகி கேணல் திலீபனின் நினைவுகளை மனதில் நிறுத்தி அந் நாட்டு காவற்துறையின் பாதுகாப்பு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது Saverne,Strasbourg பகுதியில் இடம்பெற்ற அரசியல் சந்திப்பின் தொடர்சியாக Strasbourg மாநகரசபையினை ஊடறுத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் நடைபெற்றுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஆலோசனை சபையின் முக்கிய அதிகாரியுடன் இக் குழுவினர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் 2009இல் கொடூரத்தனமாக இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும், தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனோடு மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயண செயற்பாட்டாளர்களினாலும் பிரதிநிதிகளினாலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ் ஈருருளிப்பயணம் தொடர்சியாக சுவிஸ் நாட்டின் எல்லையினை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.